தளர்ந்த உடல், காப்புக் காய்த்த கைகள், உருமாறிப் போன முகம், மஞ்சள் பூச மறந்த தாலிக் கயிறு, கடுகுமணி போலத் தோடு, பிறை நிலவைப் போல் வெண்நிறக் கூந்தல், இடைவெளி இல்லாத் தோல் சுருக்கம், இவை அனைத்துக்கும் மத்தியில் பார்த்துப் பழகிய முகம்.
“அட ஈஸ்வரி, நீயா ஆத்தா இது?” என்று சோமசுந்தரம் கேட்க, “ஆமா சோமு… கண்டு புடிச்சுட்டயே…” என்றாள் ஈஸ்வரி.
“ஏரு பூட்டி, சீமைல இருந்து வந்து பொண்ணு கேட்டும், உங்க அப்புச்சி ஊர் பண்ணாடி பேரனுக்குத் தான் கட்டி கொடுப்பேன்னு ஒத்தக் காலுல நின்னாரே, இன்னிக்கு என்ன ஆத்தா கோலமிது? ” என்று நடுநடுங்கும் குரலில் சோமசுந்தரம் கேட்க, அவன் கண்களைப் பார்க்கச் சக்தி இல்லாதவளாய் தொண்டையைத் தீண்டியபடி,
“ஆமா சோமு, அதே ஊர் பண்ணாடி பேரனக்கட்டுன சீமாட்டி தான். பல சுமைகளோடு அந்தப் பெயரையும் இறக்கி வைக்க முடியாமல் சுமந்துகிட்டு இருக்கேன்”, என்றாள் உழைத்துக் களைத்துப் போன குரலில்.
சோமசுந்தரம் தன் கண்களை கடிந்து கொண்டான். “கண்ணீரை மட்டும் கொட்டி விடாதே, அவள் நொறுங்கி விடுவாள்… “என்று.
இரட்டை வடச்சங்கிலி, பச்சைக்கல் அட்டிகை, வைர மூக்குத்தி, மாணிக்கக் கற்கள் மின்னும் ஜிமிக்கி, மூன்றடுக்கு வெள்ளிக் கொலுசு, பனாரஸ் பட்டுத் தாவணி என வளம் வந்த ஈஸ்வரியை பார்த்துப் பழகிய கண்களாயிற்றே,
அவன் இட்ட கட்டளையை ஏற்க முடியாமல், தேங்கிய கண்ணீரை மறைக்கத் திணறியது.
பாலூட்டி, சீராட்டி, ஏருபூட்டி, எட்டு மைல்கள் தாண்டி பள்ளிக்கூடம் அனுப்பி, படிக்க வெச்சு, பட்டணத்து மாப்பிளைக்குக் கட்டி கொடுத்தா, மகள் மாசத்துக்கு ஒருக்கா தான் பார்க்க வருவானு பக்கத்துல, புள்ளையை பத்திரமா பாத்துகிற மாப்பிளை இருந்தா செய்தி கொண்டு வாங்கடானு எண்திசையும் ஆள் அனுப்பினார். “பக்கத்தூரு பண்ணாடி வீட்டுல ஒரு சொக்கத்தங்கம் இருக்குது, அப்புச்சி சொல்ல மீற மாட்டாரு , நம்ம வீட்டுப் பிள்ளைய மகராணி போல வெச்சுப்பாங்க…” என்று சேதி வர, வந்த ஜனமெல்லாம் வாயடச்சுப் போகும்படி சீருசெனத்தியெல்லாம் தாராளமா செஞ்சு, ஈஸ்வரியை கட்டிக்கொடுத்தாரு காளியப்ப கவுண்டர்.
அட, காளியப்ப கவுண்டர் மகளுக்குக் கண்ணாலம். வாங்கப்பா, ஒரு எட்டு போய் பாத்திட்டு வருவோம். திருவிழா கணக்கா ஒரு வாரமா நடக்குதப்பானு எட்டுப்பட்டியும் திரண்டு வந்து மனசும், வயிறும் நெறஞ்சு போற அளவுக்கு நடந்தது ஈஸ்வரியின் கல்யாணம். பட்டுச் சேலையில, அந்த குலசாமியே நடந்து வருதப்பானு ஈஸ்வரியை பார்த்து வியந்தவர்களில் சோமசுந்திரமும் ஒருவன் .
சோமுவின் அப்பா காளியப்ப கவுண்டரின் கணக்குப் பிள்ளை . சோமு தன் வீட்டில் இருந்ததை விட ஈஸ்வரியின் வீட்டில் தான் அதிக நேரம் இருப்பான்.
தாயில்லாப் பிள்ளை என்று அன்போடும், அரவணைப்போடும் தன் சகோதரனைப் போல் சோமசுந்தரத்தைப் பார்த்துக் கொண்டாள் ஈஸ்வரி.
அவளின் திருமணம் முடிந்து சில வருடங்கள் கழித்து சோமுவின் அப்பா இறந்துவிட , தன் மாமனுடன் இலங்கைக்குச் சென்றுவிட்டான் சோமசுந்தரம்.
பல வருடங்கள் கழித்து ஒரு திருமண விழாவில் இன்று தான் ஈஸ்வரியைப் பார்கிறான். இத்தனை வருடங்களில் ஈஸ்வரியை இப்படி ஒரு தோற்றத்தில் பார்ப்போம் என்று அவன் சற்றும் நினைக்கவில்லை. நினைவுகளில் மாட்டி மீள முடியாமல், பல கேள்விகளுடன் நின்ற சோமசுந்தரத்தின் தோள்களைத் தட்டினாள் ஈஸ்வரி.
“சரி சோமு,நேரம் ஆச்சு, பேத்தி காத்துகிட்டு இருப்பா” என்று சொல்லிவிட்டு இலையில் வைத்திருந்த இனிப்பை தன் முந்தானையில் முடிந்து கொண்டு, சிவந்த கண்களுடன், அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் புறப்பட்டாள் ஈஸ்வரி.
தைரியமும் , தன்மானமும் ஈஸ்வரிக்கு இருக்கற மாதிரி இருக்கனும்னு ஊரே மெச்சும். தோல் சுருங்கினால் மட்டும் அவள் மாறி விடுவாளா என்ன? பாசத்தையும் தாண்டி அவளது நிலையை தன்னிடம் சொல்ல அவளின் தன்மானம் தடுப்பதைப் புரிந்து கொண்டான் சோமு. அவள் நிலை தெரியாமல் உதவி என்னும் பெயரில் அவள் மனதை ஊனமாக்க சோமுவிற்கு தைரியம் வரவில்லை. அவளைப் பின் தொடர அவன் மனமோ கால்களிடம் மன்றாடியது. நினைவுகளை நகர்த்தி நிகழ்காலத்திற்குள் சோமசுந்தரம் வரும் முன்பே சட்டென்று மறைந்து போனாள் ஈஸ்வரி.
அவளும் தன் கடந்தகால வாழ்க்கை நினைவுகளில் தொலைந்து போகத் தயாராக இல்லை. என்றாவது ஒரு நாள் மீண்டும் அவளை சந்திக்க மாட்டோமா என்னும் நம்பிக்கை கலந்த ஏக்கத்துடன் பிரியா விடை பெற்றான் சோமசுந்திரம்.
சில எதிர்பாராத சந்திப்புகள் பதிலின்றி மீண்டும் நினைவுகளாகவே நம்மோடு பயணிக்கும். இவர்களின் சந்திப்பைப் போல….


