நேரங்கெட்ட நேரத்தில் நமக்கு தெரிந்த அல்லது உறவினரிடமிருந்து போன் அழைப்பு வந்தால், எப்பேர்பட்ட மனிதனும் ஒரு நொடி ஆடிப்போய் விடுவான். போனை எடுத்து, ஒன்னுமில்லை சும்மா தான் கூப்பிட்டேன் என்று சொன்ன பிறகுதான் மூச்சே வரும். அநேகமாக அனைவருக்கும் இப்படி ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கும். எனக்கும் ஒரு நாள் இரவு 10:30 மணி அளவில் அப்படி ஒரு போன் அழைப்பு என் உடன் பிறந்த தம்பியிடமிருந்து.
” என்னடா.. இந்நேரத்துக்கு?”
“ஒன்னுமில்ல ஒன்னுமில்ல.. நீ எங்கிருக்க?”
“வீட்லதான்.சொல்லு ”
” நான் நைட் வாக்கிங் போனேன்.. வர வழியில….”
” வர வழியில.?? சொல்லித் தொலடா”
” NGGO காலனி முக்குல…..”
” முக்குல..?”
” முக்குல நெறைய நாய் நிக்குது. எனக்கு பயமா இருக்கு, வரியா.? *
” ஏண்டா. இப்படி ஏழு கழுத வயசாகியும் நாய்கெல்லாமா பயப்படுற.?”
” டேய் வாடா… பிளீஸ்.”
” வர்ர்ரேன்.. வை.”.
அங்க போயி பாக்கறேன், பூட்டிய ஒரு கடையின் ஷட்டரின் கீழ் பயந்து போயி உக்காந்துருக்கான் என் தம்பி. அவனுக்கு முன்னே தெரு நாய்கள். ஒன்னும் பண்ணல. ஆனா அவன பாத்த மாதிரியே நிக்குது எல்லாம். உஸ்சுனு எல்லாத்தையும் விரட்டிட்டு டேய் ச்சீ.. வாடானு பைக்ல கூட்டிட்டு வந்துட்டேன். சின்ன வயசுல எல்லோருமே இதை கடந்து வந்திருப்போம். ஆனா இப்போ நெனச்சா சிரிப்பா இருக்குது. இதுக்கா இப்படி பயந்தோம். இப்பெல்லாம் ரோட்டுல் எத்தன நாய்கள் இருந்தாலும் கவனிப்பது கூட இல்லை. ஆனால் நம் குழந்தைகளைத் தனியா அனுப்புவதில் இன்னும் பயம் இருக்கு. நடக்கும் சம்பவங்கள் அப்படி!. அதெல்லாம் சரி. ஆனா காலேஜ் படிக்கிற வயசுல பையன் இருந்தும் என் தம்பி இன்னும் தெரு நாய்களுக்கு பயப்படுவது, வேடிக்கையான வினோதம்.
சென்ற ஆண்டு ஒரு புதிய விஷயம் துவங்குவதற்காக ஜோசியம் பார்க்க என் மனைவியுடன் சென்றிருந்தேன். நிறைய விஷயங்களை தெளிவாக எடுத்துக் கூறிய ஜோசியர், கிளம்பும் முன்,
” உங்கள ஒருதடவையாவது நாய் கடிச்சிருக்கணுமே ? ”
என்ன………....து !!!!!!! நாய் கடிச்சிருக்கணுமா?? அப்படியே இருந்தாலும்.. அதுக்கும் என் வாழ்க்கை பயணத்திற்கும், என் புதிய முயற்சிகளுக்கும், இப்போ நான் வந்ததுக்கும் என்னையா சம்மந்தம்.!?
” இல்ல சார் . கடிச்சதில்ல. ”
” நல்லா யோசிச்சுப் பாருங்க.”
” இல்ல சார். எனக்குத் தெரியாதா.? இதுவரைக்கும் நாய் என்ன கடிச்சதே இல்ல. ”
” இல்லையே என் ஜாதகக் கணிப்பு பொய் சொல்லாதே”
என் மனைவியிடம் திரும்பி, “ஏன் கோகிலா! உனக்கு ஏதாவது நியாபகம் இருக்கா? 24 வருஷமா கூட இருக்காங்க. கொசு கடிச்சா கூட அவங்களுக்கு தெரியும். நாய் கடிச்சா தெரியாதா? “
“இல்லைங்க .. அப்படி எதுவும் கடிச்சதில்லைங்க” என்று அவளும் தன்பங்குக்கு ஜோசியரிடம் கூற, அவர் ஆழ்ந்த யோசனைக்குள் மூழ்கிவிட்டு. பின் கம்ப்யூட்டர் திரையை பார்க்கிறார். என் கட்டங்களை மீண்டும் ஒரு முறை உற்று நோக்குகின்றார். எனக்கு ஒன்னும் புரியல. நானே பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஜோசியம் பார்ப்பேன். அதுவும் முடிவெடுக்க முடியாத அளவுக்கு ஏதாவது இருந்தால் மட்டும். இப்பவும் நான் கேக்க வந்தது புதிய தொழில் துவங்குவது பற்றி. எதுக்குய்யா இந்த நாய் பிரச்சினை? இல்ல இல்ல. நாயோட பிரச்சினை? அது ஓரமா ரோட்டுல படுத்துட்டு இருந்துட்டு போகுது. எனக்கு மனதில் குழப்பங்கள் ஒடிகிட்டே இருக்கு.
ஜோசியர் ஒரு வழியாகக் கட்டங்களை விட்டு என்னை நிமிர்ந்து பார்த்து, ” சரிங்க பிரபு.! நான் இவ்வளவு தூரம் சொல்றேன் நாய் உங்கள ஒரு தடவையாவது கடிச்சுருக்கும்னு. ஆனா நீங்க இல்லவே இல்லைங்கனு சொல்றீங்க. ஹ்ம்ம்….!? ஓகே. இப்ப சொல்றேன், உங்களை நாய் கடிக்க வாய்ப்பிருக்கு, ஜாக்கிரதையா இருங்க ”
அடக்கடவுளே! இப்போ நான் இதை கேக்கவா வந்தேன். சரி, நடக்கும்போது பாத்துக்கலாம் என்று நினைத்துகொண்டு மற்ற விஷயங்களையெல்லாம் தெளிவாக சொன்னதுக்கு ஜோசியருக்கு நன்றி சொல்லிட்டு கெளம்பிட்டோம். அடுத்த நாள்லருந்து வெளிய போகும்போது, தெருவுல ஓரமா படுத்துருக்குற நாய் கூட என் திருட்டு முழியப் பாத்துட்டு துரத்த ஆரம்பிச்சுருது. டேய்.. டேய்.. நான் என் தம்பிய நாய்கள்ட்ட இருந்து காப்பத்துனவன்டா.. இப்படி என்னை பயந்து பொலம்ப வெச்சுட்டீங்களே ஜோஸியரு சாரு!
மாதங்கள் கடந்தன. அப்படியே மெல்ல இந்த விஷயத்தை மறக்க துவங்கினேன். நல்லபடியா அந்த புதிய திட்டத்தைத் தொடங்கி அது திறப்பு விழாவிற்கு தயாரானது. ஜோஸியருக்கு மனதுக்குள் நன்றி கூறிவிட்டு, பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்தோம். அப்போ ஒரு உறவினர் வீட்டுக்கு சென்று காலிங் பெல்லை அழுத்த, வீட்டின் உரிமையாளர் கதவை திறந்தவுடன், ஒரு நாய் முதலில் எங்களை நோக்கி ஓடி வந்தது. இதே தான், இதே தான், இதே நாய் தான்னு நெனச்சுகிட்டு,
” ஏங்க.. நாயக் கட்டி போடுங்க . அப்பத்தான் உள்ள வருவேன்”
“ஹா ஹ ஹா . மாப்ள கடிக்காது வாங்க”
” இல்லைங்க எனக்கு பயமா இருக்கு. நீங்க கட்டிப் போடுங்க வரேன். ”
” மாப்ள இது குட்டி நாயி.. இதுவரைக்கும் யாரையும் கடிச்சதில்ல .. வாங்க”
(என்னைய கடிக்கும்யா.. ஏனா.. என் கட்டம் அப்புடி )
” ப்ளீஸ் நாயக் கட்டுங்க”
” இன்னும் இதுக்கு கயிறு கூட வாங்கல மாப்ள. சரி விடுங்க” னு சொல்லி , அந்த நாய உடனே கையில எடுத்து வெச்சுக்கிட்டாரு.
ஹப்பாடானு ஒரு வழியா பத்திரிக்கையக் கொடுத்துட்டு வெளிய வந்தோம். அந்த வீட்டுகாரங்களும், இப்படி ஒரு பயந்தாங்கொள்ளியானு சிரிச்சுகிட்டே வழியனுப்பி வெச்சாங்க.
“நான் பயந்தவனா?? நானெல்லாம் என் தம்பியவே… தெரு நாய்கள்ட்ட இருந்து…” என்றபடியே கார்ல ஏறி உட்கார, என் மனைவி தலையில அடிச்சுகிட்டே
“ஏங்க இப்படி போற பக்கமெல்லாம் மானத்தை வாங்குறீங்க?”
“ஏய் உனக்கு என்ன? ஜோசியர் உன்னையவா நாய் கடிக்கும்னு சொன்னாரு? என்னைத்தானே சொன்னாரு?”
“சரிங்க அவரு எந்த நாய் கடிக்கும்னு சொன்னாரா? நீங்க பேசாம அந்த வீட்டுக்குள்ள போயிருந்தா.., அது ஒரு குட்டி நாய், அந்த குட்டி நாய்கிட்ட கடி வாங்கி அதோட இந்த நாய்க்கடி பிரச்சனைய முடிச்சுருக்கலாம்ல? இப்போ எந்தத் தெருவுல இருந்து எந்த நாய் கடிக்கப் போகுதோ போங்க.”
அட…ஆமா…இது தோனலையே எனக்கு! என்னைக் கடிக்கப் போகும் அந்த நாய் இந்நேரம் எந்தத் தெருவுல படுத்துருக்கோ… இதுக்கு பேரு நாய் படும்பாடு அல்ல, நாயால் படும் பாடு, மன நோயால் படும் பாடு. யார் வீட்லயாவது குட்டி நாய் இருந்தா அட்ரஸ் ப்ளீஸ் !
%20in%20front%20of%20him%20on%20a%20wooden%20table.%20The%20Jatha.webp)

