உளி தாங்கும் கல் – ரிதன்யா ஷங்கர்

 சிற்பி என்பவர் சிலையை செதுக்குவார். தேவையானதை வைத்துவிட்டு, தேவையில்லாதவற்றை செதுக்கி விடுவார். செதுக்கும் பொழுதுதான் சிலை அழகாக மாறுகிறது. பின்னர் அந்த சிலையை கோயிலில் வைப்பார்கள். தினமும் அந்த கடவுள் சிலையை சுத்தம் செய்து, பூஜை செய்து, மனிதர்கள் அதை வணங்குவார்கள். ஆகவே, செதுக்கப்படும் சிலைக்கும் மனிதர்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. இதை ஒரு கதை வழியாக பார்க்கலாம்.

ஒரு ஊரில் தியா என்ற பெண் வளர்ந்தாள். அவளின் தந்தையும் தாயும் கடுமையான உழைப்பாளிகள். அவர்கள் இருவரும் கடுமையாக உழைப்பதைப் பார்த்தாலே, அவளுக்கு வெளியே சென்று விளையாட வேண்டும் அல்லது தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது. அவள் பள்ளிப் பருவம் தொடங்குவதற்குமுன்பே, “அப்பா-அம்மாவுக்கு நல்ல பெயரை ஈட்ட வேண்டும்” என்ற எண்ணம் அவளது மனதில் நன்கு பதிந்துவிட்டது.

காலங்கள் கடந்தன. அவள் பள்ளி செல்லும் பருவம் வந்தது. பள்ளி சென்றதும் அங்குள்ள சக மாணவர்களுடன் பேசவும், விளையாடவும் தொடங்கினாள். அப்போது அவளுக்கு படிப்பின் முக்கியத்துவம் முழுமையாக புரியவில்லை. ஒரு நாள் பள்ளி முதல்வர், கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கையை எவ்வாறு உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது, எவ்வாறு புகழைத் தேடித் தருகிறது என்பதைப் பற்றி உரையாற்றினார். அதை கேட்டதிலிருந்து தியாவிற்கு, எப்படியாவது நன்கு படிக்க வேண்டும், விடாமுயற்சியுடன் முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

அவள் ஆறாம் வகுப்பிலிருந்தே நல்ல மதிப்பெண்கள் பெறத் தொடங்கினாள். தொடர்ந்து முதலிடம் பெற்று வந்ததால், அவளுடன் படிக்கும் சில சக மாணவர்கள், “இந்த வயதில் அதிகம் படிக்க வேண்டாம் தியா. இது விளையாட்டு பருவம். ஓரளவுக்கு படித்துவிட்டு நன்றாக விளையாட வேண்டும்” என்று கூறினர். அதை கேட்ட தியா சற்றே மனம் மாறினாள். ஆனால் விளையாடினாலும் முழுமையான மகிழ்ச்சி அவளுக்கு கிடைக்கவில்லை.

வீட்டிற்கு வந்தவுடன் படிக்கும் தியா, சற்று விளையாட்டுத்தனமாக இருந்தாலும், பெற்றோர்கள் ஒன்றும் சொல்லவில்லை. காரணம், தங்கள் குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று அவர்கள் எண்ணினர். ஆனால் அடுத்த தேர்வில் தியாவின் மதிப்பெண்கள் குறையத் தொடங்கின. இதைக் கண்ட தியாவிற்கு மனம் கேட்கவில்லை; அவள் மிகவும் வருத்தமடைந்தாள். அவளுடன் இருக்கும் சக மாணவர்கள் அவளது வருத்தத்தை சற்றும் பொருட்படுத்தவில்லை; அவர்கள் எப்பொழுதும் போலவே இருந்தனர்.

ஒரு மனிதர் வருத்தமாக இருந்தால், தான் செய்யும் வேலையை குறைவாகவே செய்வார். ஆனால் தியா அப்படியல்ல. செய்ய வேண்டும் என்று எண்ணினால், அதை நூறு சதவீதம் செய்து முடிப்பாள். செய்ய மனம் இல்லாவிட்டாலும் கூட, அதை இருநூறு சதவீதம் செய்வாள். தேர்வில் பெற்ற மதிப்பெண்களை நினைத்து மனம் வருந்தினாலும், அதே நாளில் மாலையே வீட்டிற்கு சென்று தீவிரமாகப் படிக்கத் தொடங்கினாள். “நேற்றைவிட இன்று நன்றாக படிக்க வேண்டும்” என்ற எண்ணத்துடன் முன்னேறினாள்.

அவளின் கனவு மருத்துவராக ஆக வேண்டும் என்பதே அவளது வாழ்க்கையின் இலட்சியம். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வும் நெருங்கிக் கொண்டிருந்தது. அதே சமயம் கொரானா போன்ற எதிர்பாராத சூழ்நிலை உலகையே பாதித்தது. ஆன்லைன் வகுப்புகள், இணையத்தில் பிரச்சினைகள், வீட்டிலேயே உடல்நல குறைவு – இவை எல்லாம் ஒன்றாக வந்தது.

தேர்வுக்கு முன்பே தியா கடுமையான வைரஸ் காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். முழுமையாக தயாராக முடியவில்லை. ஆனால் அவள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியவில்லை. அதன் காரணமாக மருத்துவராக ஆகும் கனவு அங்கே முடிந்தது.

பின்னர் அவள் கலைத் துறையைத் தேர்ந்தெடுத்தாள். முன்புபோல் தீவிரமாக இல்லாமல், சற்றே சுமாராகவே படித்தாள். அதற்கேற்றாற்போல் மதிப்பெண்களையும் பெற்றாள். கல்லூரியில் சேர்ந்த பிறகும், அவள் இழந்த மருத்துவர் கனவு மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில், கல்லூரியில் ஆசிரியர்கள் அரசு வேலை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்கள். அது மனம் குன்றியிருந்த அவளுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது.

அந்த நாளிலிருந்து அரசு பணியைப் பற்றி தேடத் தொடங்கினாள். நாம் எதைத் தேடுகிறோமோ, அது நம் கண் முன்னே வருவது போல, அவள் படித்த கல்லூரியிலேயே அரசு தேர்வுகளுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. கல்லூரி பாடங்களையும், அரசு தேர்வுகளையும் ஒரே நேரத்தில் படிக்க வேண்டியிருந்தாலும், அவள் சோர்வடையவில்லை. அதற்குப் பதிலாக ஒரு மந்திரத்தை அவள் பின்பற்றினாள்: “முடியும் போது நூறு சதவீதம் செய்வேன்; கடினமாக மாறும் போது இருநூறு சதவீதம் செய்வேன்.”

வாழ்க்கையில் மருத்துவராக வேண்டும் என்று எண்ணிய அவள், சூழ்நிலை காரணமாக தனது இலட்சியத்தை மாற்றி அரசு ஊழியராக ஆக முடிவு செய்தாள். மருத்துவராக இருந்தாலும் சேவை செய்வதே, அரசு ஊழியராக இருந்தாலும் சேவை செய்வதே என்ற எண்ணத்தால் தன் மனதை ஆறுதல்படுத்திக் கொண்டாள். பல்வேறு பிரச்சனைகளையும், துன்பங்களையும் சந்தித்தாலும், ஒரு பொழுதும் மனம் குன்றவில்லை. அந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் தன்னிடம் கூறிக்கொண்டே முன்னேறினாள்.

இறுதியாக, அவள் வாழ்க்கையில் சந்தித்த அனைத்து பிரச்சனைகளும், கடுமையான நேரங்களும் அவளை செதுக்கி கொண்டே இருந்தது. பல தடைகள் வந்தன. முதல் வாய்ப்பில் தேர்ச்சி ஆகவில்லை. இரண்டாம் வாய்ப்பில் நேர்காணல் வரை சென்றும் தேர்வு ஆகவில்லை.

ஆனால் அவள் கைவிடவில்லை. மூன்றாவது முயற்சியில், அவள் அரசு பணியில் தேர்வு செய்யப்பட்டாள். ஒரு நாள், நியமன உத்தரவு கையில் இருந்தபோது, அவள் நினைத்தாள், “மருத்துவராக ஆகவில்லை. ஆனால் மக்கள் சேவை செய்யும் ஒரு பொறுப்பான அரசு ஊழியராக ஆனேன்”. 

அவள் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு துன்பமும், தோல்வியும், மாற்றமும் அவளை உடைக்கவில்லை செதுக்கியது. ஒரு சிற்பி தேவையில்லாத கல்லை அகற்றுவது போல, வாழ்க்கை அவளிடம் தேவையில்லாத பயம், குழப்பம், தளர்ச்சி ஆகியவற்றை அகற்றி விட்டது. இப்போது அவள் ஒரு சிலை போல நிமிர்ந்து நிற்கிறாள் – செதுக்கப்பட்டு, உறுதியாக மற்றும் அழகாக.

Leave a Reply

Categories