கழிவு மேலாண்மை – தீர்வை நோக்கிய பயணம் (ஆய்வுத்தொடர்) – பகுதி 1 – ஆனந்தி ஆரூரன்

குப்பை இல்லா ஈரோடு: உள்ளாட்சி இணையதளம் மூலம் மக்கள் இயக்கமாக மாற்றுவோம்! 

ஈரோடு மாநகரின் பரபரப்பான சந்தைகளிலும், அமைதியான குடியிருப்புப் பகுதிகளிலும், பெருகிவரும் மக்கள்தொகைக்கு இணையாக நாளுக்கு நாள் குவியும் கழிவுகள் ஒரு மௌனமான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. கண்ணுக்குத் தெரியும் குப்பை மேடுகள் மட்டுமல்ல, கண்ணுக்குப் புலப்படாத காற்று மற்றும் நீர் மாசுபாடு எனப் பல்வேறு வடிவங்களில் இவை நம் சுற்றுச்சூழலையும், ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வருகின்றன. இந்த ஆபத்தான சுழற்சியை உடைத்தெறியவும், வருங்கால சந்ததியினருக்கு வளமான பூமியை விட்டுச் செல்லவும், நாம் இன்று அவசரமான மற்றும் ஒருங்கிணைந்த தீர்வுகளை நோக்கி நகர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 

பளபளப்பான நகரங்களின் கவர்ச்சிக்கு பின்னால் இருண்ட உண்மைகள் இருக்கலாம். சில நாடுகள் தங்கள் பரந்த நிலப்பரப்பைப் பயன்படுத்தி குப்பைகளை எளிதில் மறைத்துவிடுகின்றன. இது ஒரு வகையான ஏமாற்று வேலை. அதேபோல், வளர்ந்த நாடுகள் தங்களுடைய தேவையற்ற பொருட்களை, “ஒருவனுடைய குப்பை மற்றவருக்குப் பொக்கிஷம்” என்கிற கருத்தின் போர்வையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு அனுப்புகின்றன. உண்மையில், அவை மறுசுழற்சி செய்ய முடியாத அல்லது தீங்கு விளைவிக்கும் கழிவுகளாக இருக்கலாம். இது ஒரு நவீன காலனித்துவ முறை. சில நாடுகள், கடலை எல்லையற்ற குப்பைத் தொட்டியாகவே கருதுகின்றன. மறுசுழற்சி செய்ய முடியாத அல்லது கடினமான பொருட்களைக் கடலில் கொட்டிவிடுகின்றன. பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள அந்தப் பெரிய குப்பைத் திட்டு (The Great Pacific Garbage Patch), நாம் இயற்கைக்குச் செய்யும் துரோகத்தின் சாட்சியாக நிற்கிறது. இந்த போலித்தனமான தூய்மை ஒருபோதும் நீடிக்காது.   
திடக்கழிவு மேலாண்மை என்பது உலகலாவிய பிரச்சினை என்பதை நம்மால் யூகிக்க முடிவதனால், இது  ‘நம்மால் முடியாது’, ‘நம் ஊருக்கு சாத்தியம் இல்லை’ என்று இந்தச் சவாலை எதிர்கொள்வதிலிருந்து விலகுவதை விட, சாத்தியமான தீர்வுகளைத் தேடி பயணிப்பதே புத்திசாலித்தனம். ஒவ்வொரு தனிநபரும், குடும்பமும், வணிக நிறுவனமும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த மலைப் போன்ற பிரச்சினையையும் தூள் தூளாக்க முடியும். கழிவுகளை குறைத்தலில் ஆரம்பித்து,  முறையாகப் பிரிப்பதில் தொடர்ந்து மறுசுழற்சியை ஊக்குவிப்பது, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனப் பல்வேறு வழிகளில் நாம் மாற்றத்தை உருவாக்க முடியும்.  இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆகையால் உள்ளாட்சி அமைப்பின் இணையதளம், தகவல் தொடர்பில் பெரும் பங்கு வகிக்கிறது. முதலில் நாம் செய்ய வேண்டியது நமது ஊரின் உள்ளாட்சி அமைப்பின் இணையதளம் மற்றும் வலைதளத்தில் “திடக்கழிவு மற்றும் மறுசுழற்சி” பற்றிய அதிகப்படியான தகவல்களைத் தர முயல்வது தான்.  SWMRT பெங்களூரு, (Solid Waste Management Round Table, Bengaluru) தன் இணையதளத்தில், அதிகப் படியான தகவல்களை பொது மக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருப்பது ஒரு நல்ல முன்னெடுப்பு.  

வெற்றிகரமான உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்கள், பொதுவாக விரிவான மற்றும் பயனர்-நட்பு தகவல்களை வழங்குகின்றன.  அவற்றில் சில முக்கிய அம்சங்கள்: 
  • வீட்டில் உரம் தயாரிக்கும் முறைகள், அதற்கான உபகரணங்களோடும்  மேம்பட்ட மண்புழு உரமாக்கும் முறைகளோடும்,  பயிற்சி வகுப்புகள் அல்லது செயல்முறை விளக்கங்களுக்கான விவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட வேண்டும். 
  • அன்றாட வாழ்வில் கழிவுகளை குறைப்பதற்கான நடைமுறை ஆலோசனைகள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கலாம். 
  • மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை படங்களுடன் கூடிய விரிவான பட்டியலை வெளியிடுவது.(பிளாஸ்டிக் எண்கள் உட்பட). 
  • ஒவ்வொரு பொருளையும் மறுசுழற்சிக்கு தயார் செய்யும் முறைக்கான திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் வழங்கும் வரையறைகளை பட்டியலிடுவது. 
  • மறுசுழற்சி செயல் முறைக்கான சேகரிப்பு முதல் புதிய பொருள் உருவாக்கம் வரை எளிய விளக்கங்கள் (படங்கள்/வீடியோக்கள்). மறுசுழற்சியின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளை விளக்குவது. 
  • உள்ளூர் மறுசுழற்சி மையங்களின் முகவரி, வரைபடம் மற்றும் செயல்பாட்டு நேரங்கள், அங்கு ஏற்றுக் கொள்ளப்படும் பொருட்களின் விவரங்களை எடுத்துரைப்பது. 
  • உள்ளூரில் மறுசுழற்சி பொருட்களைப் பயன்படுத்தி புதிய பொருட்கள் தயாரிக்கும் வணிகங்கள் பற்றிய தகவல்களை தரலாம். அத்தகைய முயற்சிகளுடன் பொதுமக்கள் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களும் இடம்பெறலாம். 
  • உள்ளாட்சி அமைப்பின் மறுசுழற்சி இலக்குகள் மற்றும் இதுவரை அடைந்த முன்னேற்றத்தின் புள்ளிவிவரங்கள், மக்களை ஊக்கப்படுத்துபவை. 
  • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஈரோடு மாநகராட்சியின் கழிவு மேலாண்மை முயற்சிகளில் முழுமையாக ஈடுபடுத்த, இணையதளம் கல்விப் பொருட்களையும் (PDF, வீடியோக்கள்), விழிப்புணர்வு பிரச்சார விவரங்களையும் பகிரும் ஒரு செயல்முனைப்பு தளமாக மாறுவது அவசியம். இது மாணவர்களின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள உதவும். அவர்களை ஊக்குவிக்கும் போட்டிகளை முன்னெடுக்கலாம். 
  • பேட்டரிகள், மின்னணு கழிவுகள், மருத்துவக் கழிவுகள் போன்றவற்றை அகற்றுவதற்கான சரியான முறைகளுடன், சிறப்பு சேகரிப்பு மையங்களின் விவரங்கள் அவசியம். 
  • திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி முயற்சிகளில் தன்னார்வலராக சேருவதற்கான வழிகளை வகுப்பதன் மூலம் பொதுமக்கள் பங்களிப்பை ஊக்கப் படுத்தலாம். கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான தளங்களை உருவாக்கலாம். 
  • சட்டவிரோத கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் மற்றும் தண்டனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய தேவையாயிருக்கிறது. சட்டவிரோத கழிவுகளைப் புகாரளிப்பதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கலாம். 
  • திடக்கழிவு மற்றும் மறுசுழற்சி தொடர்பாக பொதுமக்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ) தொகுத்து வழங்கலாம். 
  • திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது புகார்கள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகளின் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுக்கப் படலாம். 
  • குப்பை சேகரிப்பு சரியாக நடைபெறவில்லை அல்லது வேறு ஏதேனும் குறைபாடுகள் (Complaint Redressal): இருந்தால் ஆன்லைனில் புகார் பதிவு செய்யும் முறையை எடுத்துரைக்கலாம். 
  • திடக்கழிவு மேலாண்மை தொடர்பான உள்ளாட்சி அமைப்பின் சட்ட விதிகள் (Bye-laws) மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய தகவல்கள் வழங்கலாம். 
  • திடக்கழிவு மேலாண்மையில் பயன்படுத்தப்படும் புதிய ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை குறிப்பிடலாம். 
  • திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சமூகங்களின் வெற்றிக் கதைகள் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும். 
  • இணையதளங்கள் பொதுமக்கள் புகார்களைப் பதிவு செய்யவும், ஆலோசனைகளை வழங்கவும், மாநகராட்சி திட்டங்கள் குறித்த கருத்துக்கணிப்புகளில் பங்கேற்கவும் ஒரு தளமாக அமைய வேண்டும். இதன் மூலம், நகரின் வளர்ச்சிப் பணிகளில் பொதுமக்கள் நேரடியாகப் பங்காற்ற முடியும். 
  • மாநகராட்சியின் பட்ஜெட், செலவினங்கள், திட்ட அறிக்கைகள், டெண்டர் விவரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக வெளியிடுவதன் மூலம், பொதுமக்கள் நிர்வாகத்தின் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளவும், பொறுப்புணர்வை நிலைநாட்டவும் உதவும். 
  • தொழில்துறை நகரங்களில் இணையதளம் என்பது ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை அமைப்பை (Integrated Waste Management System) உருவாக்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இது தகவல்களை வெளிப்படையாக்கி, செயல்பாடுகளைத் திறம்பட மாற்றி, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி, சுற்றுச்சூழல் ரீதியாக நிலைத்தன்மை கொண்ட ஒரு தொழில் நகரத்தை உருவாக்க வழிவகுக்கும். 
  • தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு, மரம் நடுதல் போன்ற சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வு தகவல்களை தொடர்ச்சியாக இணைய தளத்தில் பதிவிட வேண்டும். இது தூய்மை மற்றும் நிலையான சமூகத்தை உருவாக்க மக்களை ஊக்குவிக்கும். 
  • பொது சுகாதார அவசரநிலைகள் போன்ற சமயங்களில், உடனடி மற்றும் நம்பகமான தகவல்களைப் பொதுமக்கள் பெறுவதற்கான ஒரு முக்கிய கருவியாக இணையதளம் செயல்பட வேண்டும். 
இந்த அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான இணைய மற்றும் வலைத்தள உள்கட்டமைப்பு, ஈரோடு மாநகராட்சியை ஒரு முன்னோடி நிர்வாகமாகவும், மக்கள் நலன் சார்ந்ததாகவும் மாற்றியமைக்க உதவும். இதன் மூலம், ஈரோடு ஒரு முன்னுதாரணமான, வளர்ச்சிமிகு நகரமாக திகழ்வதோடு, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றும். இது பொதுமக்களுக்கும், மாநகராட்சிக்கும் இடையே ஒரு வலுவான பாலத்தை உருவாக்கி, கூட்டு முயற்சி மூலம் நகரத்தின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க வழிவகுக்கும்.

ஈரோடு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டிருப்பதால், அதன் இணையதளமும், வலைத்தளங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் களஞ்சியமாக மாற வேண்டும். இது பொதுமக்கள் தகவல்களை எளிதாகப் பெற்று, நகர வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் பங்கேற்க பெரிதும் உதவும் என்பது எனது நம்பிக்கை. 
அரசாங்கம் மாற வேண்டுமா, அல்லது மக்கள் மாற வேண்டுமா என்று சதா யோசித்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, ஏதோ ஒரு புள்ளியில் ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்துவதுதான் முக்கியம். இந்த ஆராய்ச்சியில் காலம் கடத்துவதைவிட, ஒரு சிறிய மாற்றமாக இருந்தாலும், அதை இப்போதே தொடங்கி செயல்படுத்துவதே புத்திசாலித்தனம். காரணம், ஒரு நல்ல மாற்றம் என்பது தானாக நிகழ்வதில்லை; அது எங்கிருந்தாவது தொடங்கப்பட வேண்டும், அது அரசாக இருக்கலாம் அல்லது தனிமனிதனாக இருக்கலாம். நகர்வு அவசியமானது! அதில் முக்கியமானது செயல்பாடுதான்.
(தொடரும்)

Leave a Reply

Categories